நாகர்கோவில், ஏப்.16 : மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (16ம்தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எச். வசந்தகுமார், அதிமுக - பா.ஜ. கூட்டணி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அமமுக வேட்பாளர் இன்ஜினியர் லெட்சுமணன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரசாரத்தில் கடைசியாக பண வினியோகம் நடப்பதாக ஒவ்வொருவரும் மற்றொரு தரப்பினர் மீது புகார் கூறி உள்ளனர். எனவே பண வினியோகத்தை தடுக்கும் வகையிலும், இன்று பிரசாரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் இன்று முதல் பறக்கும் படையினருடன் இணைந்து, வாகன சோதனை மற்றும் பண வினியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் இறங்குகிறார்கள்.