திருவண்ணாமலை, ஏப்.12: திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்த விவசாயியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் என்ற சுரேஷ்(40), விவசாயி. இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் காலை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, சுரேஷ் மற்றும் கூலித்தொழிலாளர்கள் கிணற்றில் இறங்கி தூர்வாரினர். பின்னர், பணிகள் முடிந்ததும் சுரேஷ் கிணற்றில் உள்ள படிகள் வழியாக மேலே ஏறி வந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக படி உடைந்ததில், சுரேஷ் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, சுரேஷின் சடலத்தை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர்.