அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் விடுமுறை தினமான நேற்று

 

திருவண்ணாமலை, மே 27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசன வரிசை வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. எனவே, தரிசன வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிர்ந்த மோர் மற்றும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது. நேற்று கோடை வெயில் தணிந்து, மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இதமான சூழ்நிலை காணப்பட்டதால், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்தனர். வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மாடவீதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

The post அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் விடுமுறை தினமான நேற்று appeared first on Dinakaran.

Related Stories: