வேலூர், ஏப்.11: வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உட்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு, கல்லூரியில் சோதனை நடத்தினர். அப்போது ₹10.50 லட்சத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கடந்த 1ம் தேதி காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்ேபாது பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், நேற்று முன்தினம் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் வழக்கு பதிவு செய்யக்கோரி வேலூர் எஸ்பியிடம் புகார் அளித்தார். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.