போச்சம்பள்ளி, ஏப்.10: பாரூர் பஞ்சாயத்தில், பணித்தள பொறுப்பாளரை மாற்றக்கோரி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட பாரூர் பஞ்சாயத்தில், சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகாளாக பணித்தள பொறுப்பாளராக ஒருவரே வேலை பார்த்து வருகிறார். இதனால், ஊதிய விகிதம் சமமாக கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், அவரை மாற்றி வேறு ஒருவரை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி கடந்த வாரம் பாரூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில், பாரூர் பஞ்சாயத்திற்குட்பட்ட வெத்தலக்காரனூர், மோட்டுப்பட்டி பகுதியை இரண்டாக பிரித்து மேலும் ஒருவரை பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, தேர்தல் முடிந்த பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்.