காரைக்கால், ஏப்.7: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, திருநள்ளாறு கிராம மக்களிடையே கரகாட்டம், பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த, மாவட்ட தேர்தல் துறை, கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த்ராஜா தலைமையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நல்லம்பல், சேத்தூர் பண்டாரவடை மற்றும் கோட்டாபடி கிராமப்புறங்களில் 100 சதவிகித வாக்குபதிவை ஏற்படுத்த, நடமாடும் மாதிரி வாக்குச் சாவடிகளோடு, கரகாட்டம், பொம்மலாட்டம் மூலம், நேற்று முன்தினம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.