நீடாமங்கலம், ஏப்.4: நீடாமங்கலம் அருகில் பூவனூர் தட்டித்தெரு கப்பி சாலையை தார் சாலையாக விரைவில் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் தனியார் நெல் அரவை மில் வழியாக பூவனூர் ஊராட்சி தட்டித்தெருவிற்கு சாலை ஒன்று செல்கிறது. இங்குள்ள தட்டித்தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவ, மாணவிகள் கல்வி கற்க நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை கப்பி போட்டு நீண்ட நாள்களாக தார் போடாமலேயே இருந்ததது. கடந்த ஆண்டு இந்த செய்தி தினகரனில் படத்துடன் வெளியானது. இந்நிலையில் அதன்பிறகு தட்டி தெரு சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கப்பிகள் கொட்டி அதன் மீது சிகப்பு கறளை கப்பிபோட்டு ஓரளவு வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.