ஆரல்வாய்மொழி, ஏப். 4 : வெள்ளமடம் அகஸ்தியர் குளத்தில் உள்ள தண்ணீரை சட்டவிரோதமாக வெளியேற்றி மீன்பிடித்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் குளத்தில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.
வெள்ளமடம் பீமநகரி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் அகஸ்தியர் குளம் உள்ளது. இக்குளத்திற்கு வெள்ளமடம் புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகின்றது. மேலும் இக்குளத்தில் உள்ள தண்ணீர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமடம், கரையான்குழி, சிறிய அண்ணா நகர், பெரிய அண்ணா நகர், வேம்பத்தூர் காலனி, ராஜீவ் நகர், பீமநகரி போன்ற பகுதிகளுக்கு குடி நீராக விநியோகம் செய்யப்படுகிறது. இக்குளத்திற்கு புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவதால் இக்குளம் கோடை காலங்களிலும் வற்றாத குளமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அணைகள் மூடப்பட்டதால் புத்தனார் கால்வாயில் தண்ணீர் வருவது நின்று விட்டது.இதனால் குளத்தின் நீர்மட்டமும் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் இக்குளத்தில் உள்ள தண்ணீரை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, இக்குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக திறந்து விடுவதாகவும், மீன்களை பிடித்த உடன் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் புத்தனார் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்களும் அவர்கள் சொல்வதை நம்பி இருந்துள்ளனர்.