உத்தமபாளையம், ஏப்.3: தேனி தொகுதியில் தனது மகனுக்கு எதிராக உள்ளடி வேலையில் ஈடுபடும் கட்சியினரை கண்காணிப்பு வளையத்திற்குள் ஓபிஎஸ் கொண்டு வந்துள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் மகனை தோற்கடித்தே ஆகவேண்டும் என டிடிவி தினகரன் அணியினர் எதிர்ப்பு அரசியலில் தீவிரமாக இறங்கி வேலை செய்கின்றனர். ஓபிஎஸ் மகன் வேட்புமனு தாக்கல் செய்த போதே அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சில சொத்து விபரங்களை மறைத்துள்ளார் என ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். மேலும் இவரது பிரச்சாரத்தில் ஓபிஎஸ் குடும்ப சொத்துக்கள் பற்றிய விபரங்களை விலாவாரியாக வெளிப்படுத்தினார். இந்த விபரங்கள் அனைத்தும் எப்படி எதிர்முகாமிற்கு தெரிகிறது என்று ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதனால் உடன் இருந்து கொண்டு எதிர் அணிக்கு தகவல் தரக்கூடிய ‘ஸ்லீப்பர் செல்கள்’ யார் என ரகசிய கண்காணிப்பில் அதிமுக.வின் சிலர் ஈடுபட்டுள்ளனர்.