கேரளாவில் விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கம்பம், ஜூன் 25: கேரளாவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தமிழக கேரளா எல்லைகள் வழியாக ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி கொண்டு செல்லப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய ஊர்கள் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக உத்தமபாளையம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன் அடிப்படையில் குமுளி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புட்செல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதற்குள்ளே ரேசன் அரசி கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனடியாக ஆட்டோவை பறிமுதல் செய்து அதனுள்ளே இருந்த 350 கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றி உத்தமபாளையம் வாணிபக்கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட போடி ரங்கசாமி மகன் பாஸ்கரன் (28) என்பவரை கைது செய்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அலகில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கேரளாவில் விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: