காளையார்கோவில், மார்ச் 27: காளையார்கோவிலில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். காளையார்கோவிலில் இருந்து கல்லல் செல்லும் மாநில சாலையின் ஓரமாக அரண்மனை சிறுவயல் கிராமத்திற்கு முன்பு உள்ள சறுக்குப் பாலம் அருகில் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் குழாயை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. அப்பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இதனால் கிராமங்களுக்கு போதிய குடிநீர் சப்ளை ஆகவில்லை. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.