நாகர்கோவில், மார்ச் 27: நாகர்கோவில் மாநகராட்சியில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகள் அமைக்கப்படுவதுடன், மின்கம்பங்களிலும், விளம்பர போர்டுகள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில் சுவரொட்டிகளால் அழகு கெடுவதுடன், காலை நேரங்களில் ஆபாச சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன. மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதால், மரங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் பலமுறை புகார்கள் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை ேமற்கொள்ளவில்லை. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி பொது இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.