தேர்தல் செலவின கணக்குகள், கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் மாவட்டத்திற்கான செலவின பார்வையாளர்கள் ஷியாம் குமார், ஓம் பிரகாஷ் படேல், அமித்குப்தா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்-2019ஐ கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஷியாம்குமார், ஓம் பிரகாஷ் படேல், அமித்குப்தா ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் தேர்தல் செலவு கணக்குகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், ‘நேற்றைய தினம் வரை பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் தணிக்கையின் மூலம், 54 நேர்வுகளில் மொத்தம் ரூ.82 லட்சத்து 17 ஆயிரத்து 390 பணம் முறையான ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் பறக்கும்படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்கள் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவினர் தங்களது ஆய்வின்போது முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றினால் அதன் விபரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதோடு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தொடங்கியதை தொடர்ந்து அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் செலவினங்களை நடுநிலையோடு எவ்வித பாரபட்சமின்றி தேர்தல் விதிமுறைகளுக்குட்பட்டு தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் தினமும் சேகரித்து முறைப்படுத்தி ஆவணப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்களது விருப்பு, வெறுப்பின்றி தங்களது பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: