காட்பாடியில் பரிகார பூஜைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது

வேலூர், மார்ச் 22: காட்பாடியில் பரிகார பூஜைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(53), ஜோதிடர். மேலும் இவர் ஜோதிடம் கூறுவதுடன் பரிகார பூஜைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தம்பதியினர் தங்களது 12 வயது மகளுடன் ஜோசியம் பார்க்க வந்தனர். அப்போது, ‘உங்களது ஜாதகத்தில் பிரச்னை இருப்பதால் பரிகார பூஜை செய்ய வேண்டும். எனவே, பூஜைக்கு தேவையான பொருட்களை வேலூருக்கு சென்று வாங்கி வரும்படி’ வெங்கடேசன் கூறினார்.

இதையடுத்து தங்களது மகளை ஜோதிடர் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவன், மனைவி இருவரும் வேலூர் சென்றனர். பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வெங்கடேசன் வீட்டிற்கு வந்தனர். பூஜைக்கு பிறகு மகளுடன் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு சிறுமி மிகவும் சோர்வாக இருந்தாராம். சிறிது நேரத்தில் சிறுமி திடீரென கதறி அழுதார். இதனால் பதறிப்போன பெற்றோர் மகளிடம் விசாரித்த போது, ஜோதிடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: