தாராபுரம்,மார்ச்21: ஈரோடு மக்களவை தொகுதி திமுக கூட்டணி கட்சியில் உள்ள மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி நேற்று தாராபுரத்திற்கு வருகை தந்தார்.அவரை திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ. தொண்டர்கள் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் 55 ஆயிரம் ஹெக்டேர் நிலம் முற்றிலும் அழியும் வகையிலான ஹைட்ேரா கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். கெயில் திட்டத்தை துவக்கிய போது பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது விவசாய நிலங்களில் உயர் மின்கோபும் அமைக்க பணிகளை துவங்கியுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அதே போல காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் போக்கை கண்டிக்க வேண்டிய மத்திய அரசு தனது மறைமுக ஆதரவை அளித்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. கீழ்பவானி, அமராவதி திட்டத்திலும், நீட் தேர்வை கொண்டு வந்தும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. எனவே மத்தியில் உள்ள இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு கணேசமூர்த்தி பேசினார்.