ஈரோடு, மார்ச். 20: தேர்தல் விதிமுறையால் ஈரோடு ஜவுளிசந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று நடந்த ஜவுளிசந்தையில் 20 சதவீதம் மட்டுமே ஜவுளிகள் விற்பனையானது. தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் கொண்டு செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதால், ஜவுளி விற்பனை மந்தமாக நடந்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கனிமார்க்கெட் ஜவுளிசந்தை திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரை நடைபெறும். இந்த சந்தைக்கு ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்து செல்வார்கள்.
மேலும் வாரம்தோறும் நடைபெறும் இந்த சந்தையில் சுமார் ரூ.3 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் இருக்கும். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு உள்ளதால் பணம் கொண்டு வர வியாபாரிகள் தயங்கி வருகின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது. வழக்கமாக கோடைக்காலத்தில் காட்டன் துணிரகங்களின் விற்பனை அதிகரிக்கும். ஆனால் தேர்தல் விதிமுறைகள் உள்ளதால் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.