புதுக்கோட்டை,மார்ச் 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக நடை முறைபடுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்களில் அரசியல்கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்களோ அவர்களது முகவர்களோ காதுகுத்து, வளைகாப்பு, கோயில்பூஜை, அன்னதானம், பிறந்தநாள் விழாக்கள் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்து, வாக்காளர்களுக்கு போலியாக விருந்து வைத்தல், பரிசு கொடுத்தல் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களை வாடகைக்கு அளிக்கும்போது, அதனை தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும். கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்யவரும் நபர்களிடம், பத்திரிகை நகல் போன்ற ஆதாரங்களை கேட்டுப்பெற்று பராமரிக்க வேண்டும்.