திருவண்ணாமலை, மார்ச் 20: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, திருவண்ணாமலை தொகுதியில் ஒரு சுயேட்சை மட்டுமே மனுதாக்கல் செய்தார்.தமிழகத்தில் மககளவைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும். அதையொட்டி, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை தொகுதிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஆரணி தொகுதிக்கு டிஆர்ஓ ரத்தினசாமி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மேலும், திருவண்ணாமலை தொகுதி முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ தேவி, ஆரணி தொகுதி முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ மைதிலி ஆகியோரிடமும் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.