மார்த்தாண்டம், மார்ச் 20: குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் வலம் வருவதை சகஜமாக காணலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்கள், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம். இவர்களுக்கு வாகனம் ஓட்டுவதில் அனுபவமும் முதிர்ச்சியும் இருக்காது. மேலும் ஓட்டுநர் உரிமமும் இல்லை. இருப்பினும் சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை பெருமையாக நினைத்து, தங்களின் வாகனங்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
அவர்கள் போக்குவரத்து மிகுந்த பகுதிகளிலும் வேகமாகவும், தாறுமாறாகவும் சென்று விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்களையும் அலறியடித்து ஓடச்செய்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இதுபோன்று வாகனம் ஓட்டிச்செல்பவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், போலீசார் அவர்களை பிடித்து, அந்த மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதித்து வந்தனர். இதனால் மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டி செல்வது கணிசமாக குறைந்தது.