நாமக்கல், மார்ச் 15: நாமக்கல் நகராட்சி அலுவலத்தில் ஆவணங்கள் வைக்க போதிய இடமில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் நகராட்சி அலுவலகம் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக பரமத்தி ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்செங்கோட்டில் உள்ள தினசரி சந்தை வளாகத்தில் நாமக்கல் நகராட்சிக்கு புதிய அலுவலகம் ₹2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தை கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.அடுத்த நாளே புதிய அலுவலகத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அவசர கோலத்தில் நகராட்சி ஆணையாளர், பழைய அலுவலத்திலிருந்து புதிய அலுவலகத்திற்கு ஒரே நாளில் மாற்றினார்.அலுவலகம் மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் புதிய அலுவலகத்தில் பல்வேறு மராமத்து வேலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, நகராட்சியில் பராமரிக்கப்படும் ஆவணங்களை வைக்க இன்னமும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆவணங்களை வைக்க புதிய ரேக்குகள் அமைக்கும் பணியில், 20 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். பரமத்தி ரோட்டில் செயல்பட்டு வந்த பழைய நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆவணங்கள் அனைத்தும் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட பீரோக்களில் வைக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தில் பீரோக்கள் வைக்ககூடாது என அதிகாரிகள் கூறிவிட்டதால் அனைத்து ஆவனங்களும் இன்னமும் பழைய நகராட்சி அலுவலக பீரோவில் பூட்டி கிடக்கிறது.