திருவண்ணாமலையில் துணிகரம் அப்பள வியாபாரி வீட்டில் 63 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திருவண்ணாமலை, மார்ச் 15: திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டில் 63 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை சாரோன் பகுதியில் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சேகர்(57), அப்பள வியாபாரி. இவருக்கு கவுரி, ராதா என்ற 2 மனைவிகளும், 2 மகள்கள், 3 மகன்களும் உள்ளனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சாப்பிட்ட பின்னர் அனைவரும் வழக்கம்போல் தூங்கச் சென்றனர். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது மாடி மேல் உள்ள படிக்கட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், வீட்டில் உள்ள மற்ற அறைகளுக்கு சென்று பார்த்தார். அப்போது, பூஜை அறையின் அலமாரியில் வைத்திருந்த 63 சவரன் நகைகள் திருட்டு போனதுதெரிந்தது.

இதுகுறித்து சேகர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: