சேலம், மார்ச் 12: சேலம் பொன்னம்மாபேட்டை செங்கல்அணைரோடு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (42). இவர் புத்துமாரியம்மன் கோயில் அருகே சில்லி சிக்கன் கடை வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி மாலை, அந்த கடைக்கு 3 பேர் வந்தனர். அவர்கள், சில்லி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடையில் சில்லி சிக்கன் பொறித்து கொடுத்த ஆசைத்தம்பியின் மனைவி சத்யாவிடம், சிக்கன் ருசியாக இல்லை என கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் ஆசைத்தம்பி புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ சதீஸ்குமார், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்தார். அதில் அவர்கள், சேலம் மூக்கனேரி பகுதியை சேர்ந்த சதீஷ், வளத்தி சதீஷ்(29), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பூபாலன் (எ) விஜய் (23) என்பது தெரியவந்தது. இதில் வளத்தி சதீஷ், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சதீசை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த 3 பேரும் வீராணம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அல்லிக்குட்டையில் ஒரு சில்லி சிக்கன்கடையில் கத்தியை காட்டி மிரட்டி, தகராறில் ஈடுபட்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.