கறி விருந்தில் தகராறு்: வாலிபர் குத்தி கொலை

வாடிப்பட்டி, மார்ச் 12: வாடிப்பட்டி அருகே கறி விருந்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகேயுள்ள சாணாம்பட்டியை சேர்ந்தவர் அழகன். நேற்று முன்தினம் இவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலையடிவாரத்தில் உள்ள மாவூத்து அணை சடையாண்டி கோயிலில் நேர்த்திக்கடனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தார். இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது விருந்துக்கு வந்த சாணாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவருக்கும், குரங்குத்தோப்பை சேர்ந்த பிரவு (26) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு தகராறை முடித்து வைத்தனர். தொடர்ந்து அன்றிரவு 7 மணிக்கு சாணாம்பட்டி ரயில்வே பாலத்தின் கீழ் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: