நாகர்கோவில், மார்ச் 8: நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு ரயிலை இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரு விரைவு ரயில்கள் சென்றாலும், முன்பதிவு செய்து இடம் கிடைக்காமல் அதிகம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும், இதில் பலருக்கு டிக்கெட் உறுதி ஆகாமல் பின்னர் பஸ்களில் சென்னை செல்லும் நிலைஉள்ளது. இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற பியூஸ் கோயல் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கும் விரைவு ரயிலை அனுமதித்து உத்தரவிட்டார். திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.20க்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.