கரூர், மார்ச் 7: கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் குழாய் கசிவினால் குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் பீச்சியடிக்கப்பட்டு வீணாகி வருகிறது. அப்பகுதி முழுவதும் குடிநீர் வழிந்தோடி வீணாகிக் கொண்டிருக்கிறது. கடும் வெயில் தொடங்கியிருப்பதையடுத்து குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற காலங்களில் குடிநீரை வீணாக்காமல் குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு போன்றவற்றை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆயுதப்படை பிரிவு வளாகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நுழைவு வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாக கேட்வால்வில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு குளம் போல தேங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிநீர் சீரமைப்புக்காக இந்த பகுதியில் பள்ளம் தோண்டியபோது, ஏற்பட்ட பிரச்னையை சரிவர தீர்க்கப்படாத காரணத்தினால் தற்போது கேட்வால்வு வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதியினர் கூறுகின்றனர்.