நீடாமங்கலம்,பிப்.27: கூத்தாநல்லூர் அருகில் நிமிலச்சேரி-கமலாபுரம் இடையிலான கப்பி சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி ஒன்றியம் மூலங்குடியிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் நிமிலச் சேரியிலிருந்து கமலாபுரம் செல்லும் சாலையை கடந்த 7 மாதங்களுக்கு முன் தார்சாலையாக மாற்ற கப்பி போட்டு சிகப்பு அரலை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதிலிருந்து பணிகள் தொடங்காமல் அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக புனவாசல், வெங்காரம் பேரையூர், வடபாதி உள்ளிட்ட கிராமங்களுக்கும் அங்குள்ள தனியார் வங்கிக்கும்,புனவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும்,வெங்காரம் பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் இந்த சாலையில் தான் மாணவ, மாணவிகள் பொது மக்கள் என தினந்தோறும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.