வேப்பூர், பிப். 26: வேப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு மகன் சந்திரன் (33), டிரைவர். இவர் டேங்கருடன் கூடிய டிராக்டரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் மதுரை வாகைபுரத்தைச் சேர்ந்த கிளீனர் கணேசன் என்பவர் பயணம் செய்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே தொண்டாங்குறிச்சி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி டிராக்டர் டேங்கரின் பின்புறமாக மோதியது.