ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்,  பிப்.22: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித  பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.நாமக்கல்  கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு  கிறிஸ்தவர்கள், கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் ஜெருசலேம் புனித பயணம்  செல்ல ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல விண்ணப்பிக்கலாம். நபர்  ஒருவருக்கு ₹20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். வரும் மார்ச் மாதம் முதல்  ஜூன் மாதம் வரை, பல்வேறு குழுக்களாக  10 நாட்கள் பயணம் மேற்கொள்ள  உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப  படிவங்களை, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி  பெறலாம். மேலும், விண்ணப்ப படிவங்களை இணையதளம் மூலமும் படியிறக்கம்  செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான   விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மகால் பாரம்பரிய  கட்டடம், (2வது தளம்), சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு வரும் மார்ச் 15ம்  தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: