மதுராந்தகம், பிப்.21: அச்சிறுப்பாக்கம் அருகே தர்பூசணி பழம் சாப்பிட்ட குழந்தைகள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அச்சிறுப்பாக்கம் அருகே நெற்குணம் ஊராட்சி வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன், இவரது மகள் ஐஸ்வர்யா (4). மகன் தர்ஷன் (3). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வள்ளி (8). இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுவர்கள் 3 பேரும், தங்களது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் தர்பூசணி பழம் ஒன்று சாப்பிடுவதற்கு ஏற்றார்போல் அறுத்து வைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்ட சிறுவர்கள், அங்கிருந்த தர்பூசணி பழத்தை எடுத்து சாப்பிட்டு, சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.