குடிநீர் வந்து 2 மாதமாச்சு கிராம மக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

உசிலம்பட்டி, பிப். 21: உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே உள்ளது ஏ.ராமநாதபுரம் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் ஏ.ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியலால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: