உடுமலை, பிப். 15: சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என சட்டசபையில் அமைச்சர் அறிவித்துள்ளதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள தளியை தலைமையிடமாக கொண்டு, எத்தலப்பர் வம்சா வளியினர் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவாக எத்தலப்பர் வம்சாவளியினர் செயல்பட்டனர். ஆங்கிலேயர் அனுப்பிய தூதுவனை தூக்கிலிட்டனர். பின்னர் நடந்த பேரில் தளி பாளையம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயேரை தூக்கிலிட்ட தூக்குமர தோட்டத்தின் கல்வெட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து தளி வம்சாவளியினர் சிலைகள், வரலாற்று ஆய்வுகள் கண்டறியப்பட்டு வெளிவந்தது.