மார்த்தாண்டத்தில் பரபரப்பு தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு

கருங்கல், பிப். 15: கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு சிங் (24). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி  முடிந்து மார்த்தாண்டம் பெத்தேல்தெரு பாறவிளை குளக்கரை வழியாக சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். திடீரென ஜெரால்டு சிங்கை தடுத்து நிறுத்தி யார்? என விசாரித்துள்ளனர். பின்னர் அவரது பர்சை பறித்து அதில் இருந்த பணத்தை எடுத்துள்ளனர். தொடர்ந்து அவரது செல்போனை பறித்தனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்து அவர்களிடம் இருந்து திரும்ப வாங்கினார்.இதையடுத்து அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெரால்டு சிங்கை சரமாரியாக வெட்டினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த 2 பேரும் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து ஜெரால்டு சிங்கை மீட்டு, சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ஜெரால்டு சிங் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு பணத்துடன் தலைமறைவான வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இதே போல் மார்த்தாண்டம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதம் முன் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திவிட்டு அவரது செல்போனை பறித்து சென்ற சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அரிவாளால் வெட்டி வழிப்பறி நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: