கருங்கல், பிப். 15: கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு சிங் (24). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து மார்த்தாண்டம் பெத்தேல்தெரு பாறவிளை குளக்கரை வழியாக சென்றுக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். திடீரென ஜெரால்டு சிங்கை தடுத்து நிறுத்தி யார்? என விசாரித்துள்ளனர். பின்னர் அவரது பர்சை பறித்து அதில் இருந்த பணத்தை எடுத்துள்ளனர். தொடர்ந்து அவரது செல்போனை பறித்தனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்து அவர்களிடம் இருந்து திரும்ப வாங்கினார்.இதையடுத்து அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெரால்டு சிங்கை சரமாரியாக வெட்டினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த 2 பேரும் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.