உத்தமபாளையம், பிப்.14: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர், ஞானம்பிகை கோயிலில் நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையத்தில் தென்காளகஸ்தி என அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோவில் ராகு, கேது பரிகாரஸ்தலங்களாக உள்ளன. நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு எந்தவிதமான உருவமும் இல்லை. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரண்டு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாக சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்கி இருப்பர். நேரெதிராக ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் இடப்பெயர்ச்சி அடைவர். தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசிற்கும் நேற்று சரியாக பகல் 2.02 மணிக்கு பெயர்ச்சியானார்கள். இதனை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை, சிறப்புயாகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கம்பம், கூடலூர், சின்னமனூர், போடி, தேவாரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.