பவானி, பிப். 7: சித்தோட்டிலிருந்து கோபி வரையிலான 30.6 கி.மீ. தொலைவுக்கு இருவழிப்பாதையாக உள்ள ரோட்டை, நான்கு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை அகலப்படுத்தும் போது பொலவக்காளிபாளையம், நல்லகவுண்டன்பாளையம் மற்றும் சித்தோடு கிராம பகுதிகளில் நிலம் எடுக்கப்படும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள் ஏதேனும் உள்ளதா என நேற்று கருத்து கேட்கப்பட்டது.
பவானி பயணியர் விடுதி வளாகத்தில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சாந்தி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் (திருப்பூர்) நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 6 பேர் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்தனர். தற்போது இருவழிப்பாதையாக உள்ள இந்த ரோடு 15 கிராமங்களின் வழியாக நான்கு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் 30 முதல் 35 மீட்டர் அகலத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்யப்படும். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்டிடங்கள் இல்லாத பகுதியில் 80 கி.மீ., முதல் 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையிலும், கட்டடங்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் 50 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது.