திருவெறும்பூர், பிப்.7: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படாததால் சாலை விபத்துக்களில் அப்பாவி பொதுமக்கள் சிக்கி தங்கள் இன்னுயிரை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும், 5 நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்தும் சென்று வருகிறது. திருவெறும்பூர் பகுதியில் ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், அரசு அச்சகம், மதுபான கிடங்கு என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. மேலும் பெல், அரசு கல்லூரி, என்ஐடி, ஐடிஐ, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், மலைக்கோவில், திருநெடுங்களம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளது. அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயிலுக்கு செல்வோர் நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையாக மாற்றப்பட்டது. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடப்பதற்கு ஏதுவாக பல இடங்களில் பாதை உள்ளது. சாலைகளின் நடுவே போக்குவரத்து சிக்னல்களை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர்.