நாமக்கல், பிப்.7: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. விழாவில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, 1,956 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை வழங்கி பேசினார். விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் தங்கமணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நேற்று ஒரே நாளில், 1,956 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நிகழ்ச்சி நடந்த கூட்ட அரங்குக்கு ஒன்றியம் வாரியாக பெண்கள் வரிசையில் வரவழைக்கப்பட்டு, திருமண நிதிஉதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எந்த குளறுபடியும் ஏற்படகூடாது என்பதற்காக அதிகாரிகளே களத்தில் இறங்கி வேலை செய்தனர்.