சனி பிரதோஷ விழா
திருப்புத்தூர், பிப். 3: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நேற்று நடந்த சனிபிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனிபிரதோஷத்தையொட்டி நேற்று காலை நந்தீஸ்வரருக்கு எதிராக 11 கும்பங்கள் வைத்து சிவாச்சாரியார்களால் யாகம் நடத்தப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர், உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும் மற்றும் யாகம் செய்யப்பட்ட புனிநீராலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருத்தளிநாதரும் சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்புறத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.