நாகர்கோவில்,பிப்.1: கவிமணிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து மானிய கோரிக்கையில் பரிசீலித்து நல்ல அறிவிப்பு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பால்வள தலைவர் அசோகன் வாழ்த்தி பேசினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், தமிழக அரசு ஜெயலலிதா வழியில் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது. இங்கு வந்துள்ள செய்திதுறை அமைச்சரிடம் கவிமணிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருவிலிருந்து கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றினார். அவரது வழியில் இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.