கூடுவாஞ்சேரி, ஜன.30:கூடுவாஞ்சேரி அடுத்த குமிழி கிராமத்தில் 30க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் ஏழுமலை (70) என்பவர் வசிக்கிறார். இப்பகுதியில் குடிசை வீடு கட்டியது தொடர்பாக மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏழுமலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. வெப்பம் தாங்காமல் எழுந்த ஏழுமலை, அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.