நாமக்கல், ஜன. 29: நாமக்கல் நகராட்சி அய்யம்பாளையத்தில் தார்சாலை அமைக்கக்கோரி வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி நூதன போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குட்டையையொட்டி மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பல ஆண்டாக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும் இந்த சாலை வழியாக தான் நாமக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால் மண் சாலையை, தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.