மணவாளக்குறிச்சி, ஜன.22: வெள்ளிச்சந்தை அருகே பெரும்செல்வவிளை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த போதகர்கள் சிலர் சுவிஷேச நோட்டீஸ் விநியோகம் செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் போதகர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நேற்று அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் வெள்ளிச்சந்தை காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதன் தலைமை வகித்தார். மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், ஜெகன்நாதன், மாவட்ட பா.ஜ.தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பிரசோபகுமார், மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் குமரேசன், நாஞ்சில் ராஜா மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.