கோபி, ஜன. 3: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டுவதால், அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த அணையின் வடக்கு பகுதியில் மணல் போக்கி உள்ளது. மணல் போக்கியில் இருந்து முழு வேகத்துடன் தண்ணீர் வெளியேறும் இடத்தில் சுமார் 10 முதல் 15 அடி ஆழத்திற்கு குழி ஏற்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மணல் போக்கியால் ஏற்பட்டுள்ள குழி தெரிவதில்லை. அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் போது சுழலில் சிக்கி பலியாகி வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர்.