திருமங்கலம், டிச.28: திருமங்கலம் - கள்ளிக்குடி வழித்தடத்தில் அரசுபஸ்களில் நான்குவிதமான கட்டணங்கள் வசூலிப்பதால் பயணிகள் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.திருமங்கலத்திலிருந்து கள்ளிக்குடி 17 கி.மீ துாரத்தில் அமைந்துள்ளது. தற்போது தனி தாலூகாவாக மாறியுள்ள கள்ளிக்குடியை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக திருமங்கலத்திற்கே வந்துசெல்கின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் திருமங்கலம் வந்து செல்ல அரசு பஸ்சை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் இந்த வழித்தடத்தில் விதவிதமான கட்டணங்கள் வசூலிப்பதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். டவுன் பஸ்களில் கட்டணமாக ரூ.12 வசூலிக்கப்படுகிறது. அதே சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.17 வசூலிக்கப்படுகிறது. விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி உள்ளி வெளியூர் பஸ்களில் கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. அதிலும் பாயிண்ட்டு பாயிண்ட் எனில் 18 முதல் 20 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.