சோம்பட்டு கிழக்கு காலனியில் சுடுகாடு பகுதிக்கு செல்ல பாதை இல்லாமல் அவதி

பொன்னேரி, டிச. 28: பொன்னேரி சோம்பட்டு கிழக்கு காலனியில் சுடுகாட்டு பகுதிக்கு பாதை இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொன்னேரி வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, நல்ல தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சோம்பட்டு கிழக்கு காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு பகுதிக்கு பாதை இல்லாமல் இருந்தது. தனியார் நிலத்தில் சென்று தான் அப்பகுதி மக்கள் இதுவரை, சடலங்களை அடக்கம் செய்து வந்தனர்.

எனவே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கோரி பொன்னேரி தாசில்தாருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன்பேரில், பொன்னேரி ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் கார்த்திகேயன் நேற்று நேரில் வந்து, சோம்பட்டு கிழக்கு காலனி சுடுகாட்டு பகுதியில் உள்ள பாதையை ஆய்வு செய்தார். இதன் பின்னர் பொதுமக்களிடம், ‘‘உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உங்கள் கோரிக்கைக்கு நல்ல தீர்வினை ஏற்படுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது, பொன்னேரி வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா, வழக்கறிஞர் சரண்ராஜ், காட்டாவூர் சேட்டு, விக்ரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Related Stories: