மன்னார்குடி, டிச.12: விருதுநகர் மாவட்டத்திலிருந்து மன்னார்குடிக்கு கொத்தடிமையாக அழைத்து வரப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டார்.மன்னார்குடி அருகில் உள்ள சோழபாண்டி கிராமத்தில் சிறுவன் ஒருவன் கொத்தடிமையாய் அழைத்து வரப்பட்டு ஆடு மேய்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைல்டு லைன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திருவாருரில் இயங்கும் சைல்டு லைன் அமைப்பிற்கு சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் திருவாரூர் மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்தில் இருந்து பிரகலாதன், முருகேசன் ஆகியோர் சோழபாண்டி கிராமத்திற்கு சென்று சிறுவன் குறித்து விசாரித்தனர். பின்னர் அதே கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் ஆடுகளை மேய்த்து கொன்டிருந்த சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில், விருதுநகர் மாவட்டம் பெருவேலங்குடி மாயல் ஏரி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் மகன் தர்மராஜ் (14) என தெரியவந்தது. மேலும் மன்னார்குடி அடுத்த வடபாதி, வண்டி கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் கடந்த 8 மாதங்களாக கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து வரப்பட்டனர்.