பள்ளிப்பட்டு, டிச.12: ஆர்.கே.பேட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடன் தொகைைய கேட்ட தகராறில் கொலை செய்து ஆற்றில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடு குப்பம் ஊராட்சி ராமபத்திரி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர். இவரது மகன் கருணாமூர்த்தி (32). கடந்த நவம்பர் 4ம் தேதி காணவில்லை என்று ராமன் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்தார். விசாரணையில், ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளாத்தூர் இருளர் காலனியைச் சேர்ந்த அரிபாபு (33) என்பவர் கூலிப்படை வைத்து கருணாமூர்த்தியை கொலை செய்து, கொசஸ்தலை ஆற்றில் புதைத்து தெரியவந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 10ம் தேதி திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன், தங்கராஜ் 20ம் தேதி நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்த பிரதீப், ஞானஒளி, சந்திரபோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், டிசம்பர் 5ம் தேதி சுந்தர், உமாபதி, நவீன்ராஜ் 7ம் தேதி ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குணசேகர் என்பவர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.