சேலம், டிச.5: எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, 40 நாள் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் இருந்து மாலை அணிந்து விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதையடுத்து, கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. நடப்பாண்டு இதுவரை 270 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தெற்கு ரயில்வே சார்பில் 244 சிறப்பு ரயில்கள், சென்னை-கொல்லம் மார்க்கத்தில் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. இவை கடந்த 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது. தென் மத்திய ரயில்வே சார்பில் 18 சிறப்பு ரயில்களும், கிழக்கு ரயில்வே சார்பில் 36 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.