உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி மற்றும் மணல்மேடு பகுதிகளில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் அருள் மற்றும் தேவன் ஆகியோர் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்த உள்ள நிலங்களையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அருள் நிருபர்களிடம் கூறியதாவது:உத்திரமேரூர் பகுதியில் நெற்பயிர், கரும்பு ஆகியவை அதிகளவில் விளையும் நிலங்களை 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்த உள்ளனர். எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு நிலத்தைக் கொடுக்க விருப்பம் இல்லை. அவர்களை கட்டாயப்படுத்தி நீங்களாக நிலத்தைக் கொடுத்தால் நல்லது. எதிர்ப்பு தெரிவித்தால் நிலமும் கையகப்படுத்தப்படும், இழப்பீடும் வழங்கப்படமாட்டாது என்று மிரட்டி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மக்களுக்கு ஆதரவாக பேசாமல் நிலம் கையகப்படுத்தப்படும், சாலை அமைக்கப்படும் என்று ஒப்பந்ததாரர் போல் பேசி வருகிறார்.