மதுரை, நவ. 22: அரசு மானியம் கைவிரிப்பால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, மதுரை மாநகராட்சி 11 அம்மா உணவகங்களை நடத்த முடியாமல் திணறுகிறது. இதனால் தினமும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ‘அம்மா உணவகம்’ தமிழகம் முழுவதும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிதி மூலம் நடத்தப்படுகிறது. மதுரை மாநகரில் திடீர்நகர், திருப்பரங்குன்றம், புதூர், முனிச்சாலை, சுந்தர்ராஜபுரம், பழங்காநத்தம், மதிச்சியம் உள்ளிட்ட 10 இடங்களில் 2013ம் ஆண்டு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதன் பிறகு 2015ல் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் திறக்கப்பட்டு. மொத்தம் 11 உணவகங்கள் மாநகராட்சி பொறுப்பில் உள்ளன. இங்கு தினமும் காலையில 300 பேருக்கு தலா 4 இட்லி வீதம் 1,200 இட்லி சாம்பார், (ஒரு இட்லி விலை ரூ.1) மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம் (ரூ.5), தயிர்சாதம் (ரூ.3) வீதம் விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். இதன்படி மூன்று வகை உணவுகளையும் அன்றாடம் சமைத்து விற்பனை செய்வதில் வரவு கழித்து பார்த்தால் ஒரு உணவகத்தின் பற்றாக்குறை அதாவது நஷ்டம் ரூ.7,419 ஆகிறது. 11 உணவகத்திற்கு அன்றாட மொத்த பற்றாக்குறை ரூ.81 ஆயிரத்து 609 ஆகும். இந்த புள்ளிவிவர கணக்கு 5 ஆண்டுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்தது.