திருவாரூர், நவ. 21: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களில் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ 30 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் காமராஜ் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் மாங்குடியில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில் கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் நிகழ்ச்சி ரத்தானதையடுத்து அமைச்சர்கள் காமராஜ் மற்றும் செல்லுர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, வீரமணி ஆகியோர் வழங்கினர். இதில் நீடாமங்கலம் அருகே கோவில் கிராமத்தில் கனகவள்ளி மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுகா தோலி கிராமத்தை சேர்ந்த கணபதி மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகிய மூவரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்ததற்காக மொத்தம் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ 10 லட்சம் வீதம் 30 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் திருவாரூர் ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வடகரை மற்றும் மாங்குடி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 820 பேருக்கு தலா ரூ 1000 மற்றும் வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பால் பவுடர் ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினர்.